சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக குறைந்துள்ளது. மொத்த விற்பனையில், பீட்ரூட் மற்றும் முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகின்றன. முள்ளங்கி ரூ.8, நூக்கல் மற்றும் புடலங்காய் தலா ரூ.10 என விலை குறைந்துள்ளன.
முன்னதாக கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூ.10-க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் ரூ.60, தக்காளி ரூ.15, சாம்பார் வெங்காயம் ரூ.20 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.
காய்கறிகளுக்கு சாதகமான தட்பவெப்பநிலை மற்றும் போதுமான நீர் கிடைப்பதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளது. இந்த நிலைமை மே மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.