தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக இன்று நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், மாணவர்கள் பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பிரிவினையை வளர்க்கும் சாதி, மதத்தின் பக்கம் செல்லக்கூடாது என்றும், ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதனை படைக்க வேண்டும் என்பது சாதனை கிடையாது எனவும் விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீட் மட்டும் தான் உலகமா? என்றும், உலகம் அதைவிட பெரியது என்றும், நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் எனவும் விஜய் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 12ம் வகுப்பில் 600க்கு 599 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி ஓவியா அஞ்சலிக்கு வைர காதணியை விஜய் பரிசளித்தார். 10ம் வகுப்பில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணியும் பரிசாக கொடுத்தார்.