இந்திய வம்சாவளி ஸோரானை மிரட்டும் டிரம்ப்! கிளம்பிய புதிய சர்ச்சை!

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியையும் ஜனநாயகக் கட்சியினரையும் சேர்ந்த Zohran Mamdani வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

ஃபுளோரிடாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர் வெற்றி பெற்றது போலத்தான், நியூயார்க் தேர்தல் முடிவையும் நான் காண்கிறேன்,’ என விமர்சித்தார்.

அவர் மேலும், “கடந்த ஆண்டு நவம்பரில் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தது நாட்டின் இறையாண்மையை உறுதிசெய்யத்தான். ஆனால் இந்த நியூயார்க் தேர்தல் முடிவால், அமெரிக்கா சிறிதளவு அந்த இறையாண்மையை இழந்துவிட்டது,” எனக் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியினர் நாட்டில் கம்யூனிசத்தை ஊக்குவிக்க முயல்கிறார்கள் என்றும், அது அமெரிக்காவின் அடையாளத்தையே பாதிக்கும் எனவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், நியூயார்க் மேயர் மம்தானியின் உரையில் தன்னிடம் எதிர்மறையான உணர்வுகள் தெரிந்ததாக கூறிய அவர், “மம்தானி என்னிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்; ஏனெனில், அவருக்கான பல முக்கிய முடிவுகளை அங்கீகரிக்க வேண்டியது நான்தான்,” என எச்சரித்தார்.

டிரம்பின் இந்த கூற்றுகள் இணையத்தில் வேகமாக பரவி, அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Related News

Latest News