நாளுக்கு நாள் சர்ச்சைகளை சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரே நாளில் இரட்டை பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளார். முதலில், அவருடைய வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, மேல் முறையீட்டுக்கான நோட்டீஸும், நீதிமன்றத்திற்கே உள்ள அதிகார வரம்புகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
இதேநேரத்தில், டிரம்ப் உருவாக்கிய தொழில்நுட்ப ஆலோசனை குழு — டாஜ் — இல் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக அறிவித்தார். இந்த இரண்டாவது அதிர்ச்சி, டிரம்ப் நிர்வாகத்திற்கு கடுமையான பின்னடைவாக அமைந்துள்ளது. ஒரே நாளில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் டிரம்பின் தாக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.
அதிபராக டிரம்ப் எப்போதும் அமெரிக்க நலன்களையே முன்னிலைப்படுத்துவதாக கூறி வந்தார். அதை காரணமாக காட்டி, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரிகள், பரஸ்பர வரி விதிப்புகள், அமெரிக்காவில் அதிகம் விற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான வரிகள் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், இவை நேரடியாக அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களையே பாதித்தன. அந்த நிறுவனங்கள், டிரம்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரது வரி விதிப்புகள் சட்டபூர்வமல்ல என்றும், அதிகாரத்தை மீறிய செயல்பாடுகள் என்றும் தெளிவாக தெரிவித்துள்ளது.
இதனுடன் சேர்ந்து, எலான் மஸ்க்கின் விலகல் அறிவிப்பும் வெளியாகியதால், ஒரே நாளில் டிரம்ப் சந்தித்த இந்த இரட்டை பின்னடவுகள் அவரது அரசியல் மற்றும் நிர்வாக செல்வாக்குக்கு பெரிய அதிர்ச்சியாகவும், எதிர்கால நடவடிக்கைகளில் தடையாகவும் அமைந்துள்ளது.