Thursday, June 12, 2025

நாட்டையே மிரள விட்ட ‘வைரல் பெண்’! யார் இந்த கிரேட்டா தன்பெர்க்!

கிரேட்டா தன்பெர்க்… 21 வயதான ஸ்வீடிஷ் காலநிலை செயற்பாட்டாளர். கடந்த சில நாட்களாக உலகத்தின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார். காரணம் — அவர் கைது செய்யப்பட்டார். யார் கைது செய்தார்கள் தெரியுமா? இஸ்ரேலிய படைகள் தான் அவரைக் கைது செய்தது.

ஜூன் 9, 2025 அன்று – மத்திய தரைக்கடலில், “மேட்லீன்” எனும் கப்பலில் காசா மக்களுக்கு உதவி பொருட்கள் கொண்டு சென்ற போது, கிரேட்டா மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது சினிமா போலத்தான் தோன்றும் , ஆனால் நிஜ வாழ்க்கை.

2003-ல் ஸ்டாக்ஹோம் நகரத்தில் பிறந்த கிரேட்டா, எட்டாவது வயதில் காலநிலை மாற்றம் பற்றி தெரிந்து கொண்டபோதே, நம்மால் இதைக் கடந்து வாழ முடியாது என்பதை உணர்ந்தார். 11-ஆம் வயதில் அவர் பேசுவதே நிறுத்திவிட்டார். பள்ளிக்குப் போகாமல் வீட்டில் முடங்கி கிடந்தார். பின்னர், அவருக்கு ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கிரேட்டா அதைப் பயமாக அல்ல, ஒரு “சூப்பர் பவர்” போலவே பார்த்தார்.

2018-ல், வெறும் 15 வயதில், ஸ்வீடன் பாராளுமன்றம் முன் ‘SCHOOL STRIKE FOR CLIMATE’ என்ற போராட்டத்துடன் வெளியே நின்றார். இது “Fridays for Future” எனும் உலகளாவிய மாணவர் இயக்கமாக வளர்ந்தது. அவர் வெறும் பள்ளிக்கூடம் தவிர்த்ததிலிருந்து, உலகமே விழிப்புடன் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஜிபி நாடுகள் – என எங்கு சென்றாலும், கிரேட்டாவின் உரைகள் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் Time Magazine-இன் “Person of the Year” பட்டம் பெற்றார். 2019 முதல் தொடர்ந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவர் எழுதிய “No One is Too Small to Make a Difference” என்ற புத்தகம், உலகம் முழுக்க வாசிக்கப்படும் உரைகளை கொண்டுள்ளது. இந்நூலிலும் அவர் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த பூமிக்காக செய்யக்கூடிய பங்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறார்.

அவரது வருமானம் 2025ல் சுமார் 100,000 டாலராக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், அவரின் பெரும்பாலான பணம் புத்தகங்கள், ஆவணப்படங்கள், மற்றும் நன்கொடைகளிலிருந்து வந்தாலும், அதனை கிரேட்டா தன்பெர்க் தானம் செய்வதாகவே சொல்லப்படுகிறது.

இன்று, கிரேட்டா தன்பெர்க் வெறும் காலநிலை போராளி அல்ல… மனித உரிமைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்கத் தயாராகியுள்ளார். இஸ்ரேல் காவலில் இருக்கும் இவரது நடவடிக்கையால், மீண்டும் ஒருமுறை, நம் எல்லோரையும் சிந்திக்கவைக்கிறார் – நம்மால் மாற்றத்தை உருவாக்க முடியுமா, அல்லது அமைதியாக இருந்துகொண்டு பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறோமா? என்பதை மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கிறார் கிரேட்டா தன்பெர்க்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news