Sunday, December 21, 2025

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்

ஜார்கண்ட் மாநிலத்தின் நோமுண்டி தொகுதியில் உள்ள பால்ஜோரி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த டிம்பா சதோம்பா என்பவரின் 4 மாதக் குழந்தைக்கு சுவாசப் பிரச்னை தொடர்பாக சைபாஸாவில் உள்ள சதார் மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச.18) அனுமதித்திருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி, வெள்ளிக்கிழமையில் (டிச.19) குழந்தை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர். வெகுநேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், டிம்பாவின் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பினர்.

இதனையடுத்து, மருத்துவமனை அருகேயிருந்த கடையில் ரூ. 20-க்கு பை ஒன்றை வாங்கி, இறந்த குழந்தையின் உடலைப் பையினுள் வைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

தங்களின் குழந்தைக்காக எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யவில்லை என்றும், தங்களின் மீது அக்கறை எதுவும் காட்டவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது டிம்பாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இர்பான் அன்சாரி உறுதியளித்தார்.

Related News

Latest News