Sunday, June 1, 2025

கிச்சடி சமைத்ததால் போலீசிடம் மாட்டிக்கொண்ட திருடன்

திருடச்சென்ற வீட்டில் கிச்சடி சமைத்த திருடன் போலீசிடம் மாட்டிக்கொண்ட வேடிக்கையான சம்பவம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்ஸாம் மாநிலம், குவகாத்தி நகரின் ஹெங்கரா பகுதியில் ஆளில்லா வீட்டுக்குள் இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திருடன் ஒருவன் புகுந்தான். அப்போது அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டுள்ளது.

அதனால், திருடுவதற்கு சிறிதுநேரம் இடைவேளை விட்டுவிட்டு, கிச்சடி சமைக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கினான். அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருந்து சத்தம் வரத்தொடங்கியது.

ஆளில்லா வீட்டிலிருந்து சத்தம் வரத்தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் உஷாராயினர். அவர்கள் அங்குவந்து பார்த்தபோது கொள்ளையன் சமைத்துக்கொண்டிருந்தான். சற்றும் தாமதிக்காமல் பாய்ந்துசென்று கொள்ளையனைப் பிடித்தனர். உடனடியாகப் போலீசுக்குத் தகவல்கொடுத்து அவர்களிடம் திருடனை ஒப்படைத்தனர்.

இந்த விவரங்களை அஸ்ஸாம் காவல்துறைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

அந்தப் பதிவில் திருட்டு முயற்சியின்போது கிச்சடி சமைப்பது உங்கள் நல்வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டு, திருடன் கைதுசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, திருடனுக்கு போலீசார் சூடான உணவை வழங்கியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news