கடலை மிட்டாய் என்றாலே அது கோவில்பட்டி தான். சந்தையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று தனி மவுசு உண்டு..அதிலும் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் என கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது.
கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கடலை மிட்டாய்க்கு மிகவும் முக்கியமான மூலப்பொருள் நிலக்கடலை தான். சமீபகாலமாக நிலக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8000 விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது 6500 ரூபாய் உயர்ந்து14500 ரூபாயாக விற்பனை ஆவதால் கடலை மிட்டாய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில் கடலை மிட்டாய் விலையை 40% உயர்த்த கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் ஒரு கிலோ ரூ. 160 முதல் 180 என மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் 40 சதவீத உயர்வினால் இனி ரூ. 220 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
