முன்னதாக ஆதார் கார்டு மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் தனிநபர் அடையாளம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, யுபிஐ வசதி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் புரட்சியை இந்தியா நிகழ்த்தியது. இப்போது, இந்திய அரசு மறுபடியும் ஒரு முக்கியமான டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வர தயாராக இருக்கிறது!
இந்த புதிய திட்டத்தின் பெயர் – டிஜிட்டல் முகவரி ஐடி.
அதாவது, ஒவ்வொரு நபருக்கும் துல்லியமான, ஒரே ஒரு டிஜிட்டல் முகவரி அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இது, அந்த நபரின் வீடு எங்கிருக்கிறது என்பதை அரசு சேவைகள், ஆன்லைன் ஆர்டர், கூரியர், உணவு டெலிவரி போன்ற சேவைகளில் சரியாக கண்டறிய உதவும்.
இது எந்தத் துறையின் கீழ் வரும்னு கேக்கிறீங்களா?
இந்த திட்டம் இந்திய தபால் துறையால் உருவாக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்கிறது. இதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்.
இது வந்தாலே, உங்கள் முகவரியை எந்த இணையதளத்திலும் இவ்வளவு நேரம் எழுத வேண்டாம். ஒரு ஸ்டாண்டர்ட்டான ID போதும். அதை மட்டுமே பயன்படுத்தி எந்த தளத்திலும் சரியான முகவரியை பரிமாற முடியும் — அதுவும் உங்கள் அனுமதியுடன் மட்டுமே!
இது எப்படி உதவும்னா, இப்போது நிறைய பேர் முகவரியை குழப்பமாக எழுதுகிறார்கள். “மணல் கடையின் பக்கத்து தெரு”, “பட்டாளம் மண்டபம் எதிரில்” மாதிரி தெளிவற்ற விளக்கம் கொடுக்கிறார்கள். இதனால் சுமார் ₹10 முதல் ₹14 பில்லியன் வரை இந்தியா வருடம் தோறும் இழக்கிறது! இது GDP-வில் 0.5% இழப்புக்கு காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகிறது!
இந்த நவீன திட்டம் வந்துவிட்டால், உங்கள் முகவரி துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்படும். அனுமதி இல்லாமல் யாரும் பார்க்க முடியாது. அது மட்டுமல்ல, இது சேவையின் வேகத்தையும் குறைந்த செலவுகளையும் உறுதி செய்யும்.
இது சாதாரண மாற்றம் அல்ல… இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் அடுத்த பரிணாமம்.
உங்களுக்கான முகவரி… இனி ஒரு ஸ்மார்ட் ஐடி!