உலக நாடுகளை அதிரவைத்த இந்திய ராணுவம்! முதல்முறையாக அமெரிக்காவில் நடந்த மெகா ஆக்ஷன்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவக் காட்சியைக் கண்டிருக்கிறது. ‘பேட்டில் இன் தி பே’ (Battle in the Bay) – இந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு அதிரடி ஆக்ஷன் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்தப் பெயருக்கு ஏற்றார் போலவே, அமெரிக்காவின் டாம்பா (Tampa) கடற்கரைப் பகுதியில் இந்தியச் சிறப்புப் படை கமாண்டோக்கள் நடத்திய சாகசங்கள், அங்கிருந்த 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத் தலைவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேசச் சிறப்புப் படைகளின் வாரத்தை முன்னிட்டு (SOF Week 2026), அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த பிரம்மாண்ட போர் ஒத்திகையில், இந்திய ராணுவம் முதல்முறையாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளது. இந்திய ராணுவத்தின் மேற்கு மண்டலத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர பால் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த நிகழ்வில் பங்கேற்று இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

கடற்கரை ஓரமாக நடந்த இந்த நேரடி போர் ஒத்திகையில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காடுகளுக்குள் புகுந்து தாக்கும் முறை மற்றும் இமயமலை போன்ற உயரமான பகுதிகளில் நடத்தப்படும் போர் யுக்திகளை இந்திய வீரர்கள் செய்து காட்டினர். குறிப்பாக, ‘கேபெக்ஸ்’ (CAPEX) எனப்படும் இந்தத் திறன் வெளிப்படுத்தும் நிகழ்வில், இந்தியா முதல்முறையாகத் தனது கமாண்டோக்களைக் களமிறக்கியது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு உறவு எந்த அளவிற்குப் பலமாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இந்த ‘பேட்டில் இன் தி பே’ நிகழ்வே ஒரு சாட்சி. 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் முன்னிலையில், இந்திய கமாண்டோக்கள் காட்டிய அந்த வேகம் மற்றும் துல்லியம், இந்திய ராணுவத்தின் உலகளாவிய அடையாளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

எதிர்காலப் போர்க்களங்களில் நவீனத் தொழில்நுட்பமும், வீரமும் இணைந்து எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்திய வீரர்களின் இந்தச் சாகசம் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. வல்லரசு நாடுகளின் கமாண்டோக்களுக்கு இணையாக, இந்தியச் சிறப்புப் படைகள் நிகழ்த்திய இந்த ‘டாம்பா அட்டாக்’, இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News