தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் பேச முயன்றபோது அவரது மைக் அணைக்கப்பட்டது என 13 குற்றச்சாட்டுக்களை மக்கள் மாளிகை முன்வைத்தது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஆளுநர் உரை நேரலை வராததற்கு தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையாக இருக்கலாம்.ஆளுநரின் மைக் ஆப் செய்யப்படவில்லை.அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்துள்ளார்.
ஆளுநர் மாளிகை அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறி வருகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் கூறி வருகிறார். மத்திய அரசே தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக கூறுவதை ஆளுநர் எப்படி மறுக்க முடியும்.
இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை என்றால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எப்படி அடைய முடியும்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பிறமாநிலங்களோடு ஒப்பிடவே முடியாது.
வருகிற செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சவில்லை. தமிழகத்திற்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
