கோப்புகளைத் திருடிச்சென்ற ஆடு

330
Advertisement

ஆடு ஒன்று அரசு அலுவகத்துக்குள் புகுந்து ஆவணங்களைத் தூக்கிச்சென்ற வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் சௌபேபூர் பிளாக் அலுவலகத்திற்குள் பேரூராட்சி செயலர் அலுவலகம் உள்ளது. அங்கு கிராம வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அலுவலகத்துக்கு வெளியே இருந்து அலுவலர்கள் பணிபுரிந்துகொண்டிருக்க அரசு அலுவலகம் காலியாக இருந்தது.

அப்போது அங்கு வந்த கருப்பு ஆடு ஒன்று தடாலடியாக அலுவலகத்துக்குள் நுழைந்து அரசு ஆவணங்களை வாயில் கவ்வி எடுத்துச்சென்றது. வெளியே நின்றிருந்த அரசு அதிகாரிகள் அதைப் பார்த்து முதலில் குழப்பமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் சுதாரித்துக்கொண்டு அதை விரட்டத் தொடங்கினார். முடிந்தால் பிடித்துப் பார் என்பதுபோல வேகமாக ஓடத் தொடங்கியது அந்தக் கருப்பாடு.

வெகுதூரம் விரட்டிச்சென்ற பிறகு அந்த ஆட்டைப் பிடித்த அரசு ஊழியர் அதனிடமிருந்து ஆவணத்தைப் பிடுங்கினார். ஆனால், அதற்குள் ஆவணத்தின் ஒரு பகுதியைத் தின்றுவிட்டது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் அரசு வேலையை ஆய்வுசெய்ய அரசு அலுவலகத்துக்குள் நுழைந்ததோ என்று கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஆடால் எப்படி ஆவணத்தை எடுக்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு, டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ஆன்லைனில் சென்றதிலிருந்து வைரலாகத் தொடங்கியுள்ளது.