நாட்டின் மிக நீண்டகால முதல்வர்களில் ஒருவராக நிதிஷ்குமார் தொடர்ந்து இடம்பெறுகிறார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் மாநிலத்தின் அரசியல் தலைமைப் பதவியை அவர் வகித்து வருகிறார். முதன்முதலாக 2000 மார்ச் 3-ஆம் தேதி அவர் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், அந்த அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஏழு நாட்களுக்குள் பதவி இழந்தது. பின்னர் 2001 தேர்தலில் ராப்ரி தேவி மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார்.
அதன்பின், 2005 நவம்பர் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற நிதிஷ், மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2010-ல் மூன்றாவது முறையாக முதல்வரான அவர், தொடர்ந்து பாஜகவின் ஆதரவைப் பெற்றிருந்தார். ஆனால் 2014-ல் பாஜகவிலிருந்து விலகி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து 2015 தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2017-ல் கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் NDA-வில் இணைந்தார்.
2020-ல் மீண்டும் முதல்வரான நிதிஷ், 2022-ல் NDA-வில் இருந்து வெளியேறி RJD, காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவுடன் அரசை அமைத்தார். மேலும், 2024 மே 24 முதல் 278 நாட்கள் ஜிதன் ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். பிறகு ஜனவரி 2024-ல் மீண்டும் பாஜகவுடன் இணைந்து, ஒன்பதாவது தடவையாக பதவி ஏற்றார். தற்போது தேர்தல் வெற்றியின் தொடர்ச்சியாக 10-வது முறையாக அதிகாரத்தில் அமரவிருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிய பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம் பெரும் ஆதரவை பெற்றது. இந்த திட்டத்தின் கீழ் 1.5 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.10,000 செலுத்தப்பட்டது. இது தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் ‘வாக்கு கைமாற்றம்’ என விமர்சித்தன. இருப்பினும், NDA வரலாற்று வெற்றி பெற்றது.
திட்டத்திலிருந்து பயன் பெற்ற பெண்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களும் NDA-க்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. ரூ.10,000 திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை; பெண்கள் சிறு தொழில்களை துவங்குவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் தொழிலில் வெற்றி பெற்றால், பீகார் அரசு கூடுதல் ரூ.2 லட்சம் கடனும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இத்தகைய திட்டங்களே நிதிஷ் மீதான மக்கள் நம்பிக்கையை மேலும் உறுதிசெய்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
