தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சர்வதேச போர் பதற்றம், பொருளாதார சிக்கல்கள் எனப் பல காரணங்களால், முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தங்கம் மாறியுள்ளது. இந்த விலை உயர்வு எங்கே போய் நிற்கும்? இதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,680$ டாலரைத் தாண்டியுள்ளது, இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 3 லட்சத்து 24 ஆயிரத்து 271 ரூபாய் ஆகும். இதற்குச் சற்று முன்பு, தங்கம் 3,685.39 டாலர், அதாவது சுமார் 3 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் கூடுதலான ரூபாய் என்ற தனது வாழ்நாள் சாதனையைத் தொட்டது. கடந்த வாரம் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 1.6% உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க தங்க ஃப்யூச்சர்ஸ் விலையும் 3,719 டாலராக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் கூடுதலான ரூபாயாக உயர்ந்துள்ளது, இது முதலீட்டாளர்களின் பெரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
இந்த மாபெரும் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாகப் பல விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. முதலாவதாக, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. டாலர் குறியீடு (Dollar Index) 0.3% குறைந்து, ஒரு வாரத்தில் இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. டாலர் மதிப்பு குறைந்தால், மற்ற நாட்டு பணத்தில் தங்கம் வாங்குவது லாபகரமாக மாறும், இது தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, அமெரிக்காவின் 10 ஆண்டு கருவூல லாப பத்திர வட்டி விகிதம் (Treasury yields) குறைந்துள்ளதும் தங்கத்தின் மீது முதலீடுகளைக் குவித்துள்ளது.
அனைவரின் பார்வையும் இப்போது இந்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) கூட்டத்தின் மீது உள்ளது. இந்தக் கூட்டத்தில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. குறைந்தது 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும், சிலர் 50 புள்ளிகள் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் நம்புகின்றனர். வட்டி விகிதங்கள் குறைந்தால், வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரிக்கும். இதுவே “பாதுகாப்பான முதலீடு” (Safe Haven) என்று தங்கம் அழைக்கப்படக் காரணம்.
Zaner Metals நிறுவனத்தின் உலோக நிபுணர் பீட்டர் கிராண்ட், தங்கத்தின் அடுத்த இலக்கு 3,700 டாலர் (சுமார் ₹3.26 லட்சம்), 3,730 டாலர் (சுமார் ₹3.28 லட்சம்), மற்றும் 3,743 டாலர் (சுமார் ₹3.30 லட்சம்) என அடுத்தடுத்த கட்டங்களை எட்டக்கூடும் என்று கணித்துள்ளார். இதற்கிடையில், சீனா தனது தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிகளில் சில சலுகைகளை அளிக்கலாம் என்ற செய்தியும், உலகளாவிய தேவையை மேலும் தூண்டியுள்ளது.
தங்கம் மட்டுமல்ல, மற்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.1% உயர்ந்து 42.62 டாலராக, அதாவது சுமார் 3,755 ரூபாயாகவும், பிளாட்டினத்தின் விலை 0.7% உயர்ந்து 1,400.77 டாலராக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாயாகவும் வர்த்தகமாகிறது. இந்த விலை உயர்வு தொடருமா? தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
