காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக நிம்சுலைட் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மருந்தை அதிக அளவில் பயன்படுத்தினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிம்சுலைட் மருந்துக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, 100 மில்லிகிராமுக்கு மேற்பட்ட அளவு கொண்ட நிம்சுலைட் மருந்துகளுக்கு உடனடியாக தடை அமல்படுத்தப்படுகிறது. இவ்வகை மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் என்பதன் அடிப்படையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதே நேரத்தில், 100 மில்லிகிராமிற்கு குறைவான அளவில் உள்ள நிம்சுலைட் மருந்துகளை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
