சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : திராவிட மாடல் அரசு பெண்களை ஏமாற்றிவிட்டதைப் போல் சில சொல்ல வருகிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, வீட்டில் முடங்கியிருந்த பெண்களை வெளியே வரவைத்தது, திருமண உதவித் திட்டம் மூலம் பெண்களை படிக்க வைத்தது எல்லாமே தி.மு.க. அரசுதான்.
மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் நாடகம் போடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான ஆட்சி என பச்சை பொய் கூறுகிறார்கள்.
இன்று தமிழகத்தில் பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். அந்த புகார்கள் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.