Saturday, April 19, 2025

‘Gold loan’-க்கு கடுமையான கட்டுப்பாடு ! 75% ‘rule’ வந்தாச்சு!

தங்க நகை அடகு வைத்து கடன் பெறுவது இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வரும் வழக்கமான ஒன்று. குறிப்பாக, அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்படும்போது, மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் வாங்குகிறார்கள். இதை பலர் வீட்டுக்கே வந்தே செய்யும் நிலையில், மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கிராமத்து கடைகள்வரை பலரும் இந்த சேவையை வழங்குகின்றனர்.


இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய அறிவுறுத்தல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. இவை நேரடியாக நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உள்ள நிபந்தனைகள் எனினும், வாடிக்கையாளர்களும் இதில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால், நீங்கள் எங்கு நகை அடகு வைக்கிறீர்கள், அங்கு இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தெரிந்து வைத்திருப்பது பாதுகாப்புக்கு நல்லது.


ரிசர்வ் வங்கியின் முக்கியமான அறிவுறுத்தல் என்னவென்றால், இனிமேல் நகை அடகு கடன் வழங்கும் முறையில் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். ஒரே மாதிரியான நடைமுறைகள் எல்லா நிறுவனங்களிலும் இருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர் திருப்பி செலுத்தும் திறனை வைத்து கடன் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
முக்கியமாக, எல்டிவி – அதாவது Loan-to-Value என்ற அளவீடு கடன் முழுவதும் 75%க்கு மேல் செல்லக்கூடாது.

உதாரணத்திற்கு, நீங்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை அடகு வைத்தால், அதிகபட்சம் ரூ.75,000 வரை மட்டுமே கடன் வழங்கலாம். இது ரிசர்வ் வங்கி சுலபமாக வைத்துள்ள ஒரு விதி.
ஆனால் இதோடே முடிந்துவிடவில்லை. நகை மதிப்பு குறைந்தால், எல்டிவி விகிதம் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் அந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து ஒரு சதவிகிதத்தை பாதுகாப்பு நிதியாக ஒதுக்க வேண்டும். இது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில் செயல்படும் சிறு நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக இருக்கிறது.


கிராமங்களில் பலரும் சிறிய கடன் தொகைகளுக்காகவே நகை அடகு வைக்கிறார்கள். இவர்களிடம் வருமான ஆவணங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. சாலரி ஸ்லிப், பான்கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றை கேட்டால், அவர்களுக்கு அது கொடுக்கவே முடியாது. அப்படி இருக்க, இந்த விதிகளை என்னவாக சிறிய கடைகள் பின்பற்றப் போகின்றன?


இது எல்லாம் பொருளாதார நிபுணர்களுக்கும் குழப்பமே. ரிசர்வ் வங்கி இதை எப்படி அமலாக்கப் போகிறது? விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? ஆயிரம், ஐநூறு நகைக்கடைகள் இருக்கும் நிலையில், எல்லோருமே இப்படியான ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற முடியுமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் வருங்காலத்தில் மட்டுமே தெரியும். ஆனால், வாடிக்கையாளர்களாக நம்மால் செய்யக்கூடியது, நம்முடைய நகையை எங்கு அடகு வைக்கிறோம், அந்த நிறுவனம் நியமங்களை பின்பற்றுகிறதா என்பதை கவனமாக பார்ப்பது.

நம் நகை பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களை தேர்வு செய்வதுதான் நல்லது.

Latest news