தமிழ்நாட்டின் மாணவர்கள், அரசு வேலைவாய்ப்புக்கு தயாராகி வெற்றிபெற ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘நான் முதல்வன் – போட்டித் தேர்வுப் பிரிவு’, 2025-ற்கான SSC, Railways மற்றும் வங்கிப் பணிகளுக்கான நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கட்டணமில்லாத ஆறுமாத உறைவிட பயிற்சி திட்டம் ஆகும்.
இந்த திட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2023-ம் ஆண்டு துவக்கப்பட்டதில் இருந்து, தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வேலைக்கான தேர்வுகளுக்கு தயார்படுத்த பல பயிற்சிகளை வழங்கி வருகிறது.
2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஆண்டுதோறும் 1,000 மாணவர்களுக்கு இலவச உண்டு-உறைவுடன் கூடிய தரமான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் படி, 2025-ம் ஆண்டு மே 31ம் தேதி, வங்கிகள் மற்றும் SSC-Railways தேர்வுகளுக்கான இரண்டு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்கள் இதில், இரண்டு தேர்வுகளிலிருந்து ஏதேனும் ஒரு பயிற்சிக்கே மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஏப்ரல் 29 முதல், naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 13, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பலனை, கடந்த ஆண்டில் IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்ற 57 மாணவர்கள் மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது. அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பாராட்டியதாகவும், மேலும் பயிற்சி மையங்களை விரிவாக்கும் நோக்கத்தில் சென்னை ஷெனாய் நகரில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறவிடக்கூடாது. உண்டு, உறைவிட வசதியுடன், இலவசமாக அரசு வேலைக்கு பயிற்சி பெற இது ஒரு சிறந்த வாய்ப்பு.