இந்தியாவில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வேகமாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், குறிப்பாக KYC மோசடிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
KYC, அதாவது “உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்” என்பது, வங்கிகள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முக்கிய செயல்முறை. ஆனால் மோசடிக்காரர்கள் இதைத்தான் தவறாக பயன்படுத்துகிறார்கள்.
முதலில் பயத்தை ஏற்படுத்தும் ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி வரும் —அதில் “உங்கள் கணக்கு இன்று மாலை 5:30 மணிக்கு முடக்கப்படும்; உடனே உங்கள் KYC யை புதுப்பிக்கவும்” என்று வரும் — அதில் உள்ள ஒரு போலியான இணையதள இணைப்பு அல்லது APK கோப்பு இணைப்பை கிளிக் செய்து விட்டால் உங்கள் மொபைலில் ஒரு போலி வங்கி ஆப் நிறுவப்படுகிறது.
பின்னர் அது உங்கள் கேமரா, மைக்ரோஃபோன், SMS, மற்றும் தொடர்புகளுக்கு அனுமதி கேட்கும். நீங்கள் ஒப்புக்கொண்டவுடன், உங்கள் OTPகள், கடவுச்சொற்கள், CVV, எல்லாம் அவர்கள் கைவசமாகிவிடும். சில நேரங்களில் உங்கள் மொபைலைவே அவர்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்.மேலும் உங்கள் வங்கி கணக்குகள் கூட முடக்கப்படலாம்…
குறிப்பாக ICICI, HDFC, Axis போன்ற முன்னணி வங்கிகள் எந்த நேரத்திலும் மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது SMS மூலம் KYC புதுப்பிக்கச் சொல்லமாட்டார்கள் என்று வலியுறுத்துகின்றன.
அதே சமயம், Android, Apple போன்றவற்றில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை CERT-In போன்ற அமைப்புகள் எச்சரிக்கின்றன. இதனால் நாம் தொடர்ந்து நம் மொபைலை அப்டேட் செய்து, தேவையற்ற செயலிகளை நிறுவாமல் இருக்கவேண்டும்.