அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று (ஜூன் 25) மதியம் 12:01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி விண்ணிற்கு புறப்பட்டது.
இதில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் முதன்முறையாக தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விண்வெளி பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயணம் பலமுறை வானிலை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த 22-ந்தேதி திட்டமிடப்பட்ட ஏவல் தொழில்நுட்ப கோளாறால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று வானிலை 90 சதவீதம் சாதகமாக இருப்பதால், பயணம் தடையின்றி மேற்கொள்ளப்பட்டது.
விண்கலம் நாளை (ஜூன் 26) காலை 7 மணிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மனி மாட்யூலில் தானாக இணைக்கப்படும் என NASA தெரிவித்துள்ளது.