அமெரிக்கா மீண்டும் ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்த முறை நேரடியாக அல்-கொய்தாவின் முக்கியத் தலைவர் சாத் பின் அதிஃப் என்பவரிடமிருந்து வந்துள்ள அச்சுறுத்தல், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போது அல்-கொய்தா அமைப்பின் மூலம் வெளியான ஒரு புதிய வீடியோவில், டொனால்ட் டிரம்ப், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், மற்றும் தொழிலதிபர் எலோன் மஸ்க் ஆகியோர் நேரடி இலக்குகள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மூவரையும் எங்கு பார்த்தாலும் கொல்லுமாறு, அவர் அமெரிக்க முஸ்லிம்கள் மற்றும் தன்னுடன் இணைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
வீடியோவில், “நாங்கள் தூண்டப்பட்டால், நீங்கள் பிழைக்க மாட்டீர்கள்” என அவர் காட்டமாகவும் நேரடியாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுவரை மௌனமாக இருந்த அல்-கொய்தா, மீண்டும் ஈடுபாடு காட்டும் அறிகுறியாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சாத் பின் அதிஃப், அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் எழுந்தால் இந்த மூன்று தலைவர்களும் உயிர் பிழைக்க முடியாது என்றும் கூறுகிறார். மேலும், பாலஸ்தீனியர்களை ஒடுக்குபவர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்துவது நியாயமானது என்றும் அந்த வீடியோவில் அவர் வலியுறுத்துகிறார். இந்த போராட்டத்தில் பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களையும் இணைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பயங்கரவாதத் தலைவரின் முழுப் பெயர் சாத் முகமது அதீஃப், அல்லது சாத் பின் அதிஃப் அல்-அவ்லாகி. இவர் தற்போது அல்-கொய்தாவின் அரேபிய தீபகற்ப கிளையின் தலைவராக இருக்கிறார். 2024 மார்ச் 10ஆம் தேதி, காலித் அல்-பதர்ஃபியின் மரணத்தைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த நேரத்தில், அமெரிக்கா இவரை உலகின் மிக ஆபத்தான பயங்கரவாத தலைவர்களில் ஒருவராக அறிவித்து, அவரது தலையின் மீது 6 மில்லியன் டாலர் வெகுமதியையும் அறிவித்துள்ளது.
அல்-கொய்தா மீண்டும் உலகமே பதறும் அளவில் செயல்படத் தொடங்கியிருக்கிறதா? அந்த கேள்வி இப்போது அனைத்து நாட்டு அரசுகளையும் உன்னிப்பாக செயல்பட வைக்கும் நிலையில் உள்ளது.