பல ஆண்டு காலமாகவே இந்தியா ரஷ்யா நட்பு, ஆழமான ஒன்று என்பது உலகமே அறிந்த ஒன்று. அது உண்மை தானா என கேள்வி எழுப்பும் விதமாக இருக்கிறது தற்போது நடந்திருக்கும் ஒன்று. சமீபத்தில் பாகிஸ்தானுடன் மோதல் வெடித்தபோது இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணையை களமிறக்கி பாகிஸ்தானுக்கு அடி விளாசப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது ரஷ்யா – பாகிஸ்தான் உடன் கைகோர்த்திருப்பது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் மீதான தாக்குதலில் அந்நாட்டை அலறவிட ரஷ்யாவின் ஆயுதங்கள் இந்திய தாக்குதலில் மிகவும் முக்கியமானவையாக இருந்தன. இதனால் மேலும் S 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டத்தை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இப்படி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ளார்ந்த பந்தம் அசைக்க முடியாததாக இருக்கும் நிலையில் தான் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வந்த ஸ்டீல் மில்ஸ் கார்ப்பரேஷன் என்ற இரும்பு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அது 2.14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டில் மூடப்பட்டது. இந்த ஆலைக்கு ரூ.345 மில்லியனுக்கு கடன் இருப்பதால் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த ஆலையை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வர ரஷ்யா உதவி கரம் நீட்டியுள்ளது. ரஷ்ய தூதர் டெனிஷ் நஸ்ரூவேவ் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே இது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சியே. இந்த ஒப்பந்தத்தால் ரஷ்யா – பாகிஸ்தான் உறவு வலுவடையும் என்றும் இது ஆலை திறப்பு என்பதோடு நிற்காமல் பாதுகாப்பு துறை, வர்த்தகம் வரை செல்லலாம் என்றும் ரஷ்யாவின் ஆயுதங்கள் வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கும் கிடைக்கலாம் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால் இது இந்தியா – ரஷ்யா நட்புக்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.