மூளைக்கு உலை வைக்கும் உப்பு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

162
Advertisement

‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்பார்கள். ஆனால், இந்த அளவிற்கு ருசியையும் பயனையும் தரும் உப்பை சற்றே அதிகம் உட்கொண்டு விட்டால் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஏற்கனவே பல ஆய்வுகளில் உறுதியாகியுள்ள நிலையில், அண்மையில் வெளியாகிய ஆய்வு முடிவுகளில் அதிகப்படியான உப்பு மூளையை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தேவைக்கு அதிகமான உப்பு பயன்பாடு மூளையில் 60 முதல் 75 சதவீதம் வரை stress hormoneகளை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீத மக்களுக்கு அதிகப்படியான உப்பு தான் இரத்த அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், இரத்தத்தில் கலக்கும் அதிக அளவிலான உப்பு, மூளையின் இரத்த ஓட்டத்தை குறைத்து அதனால் செயல்திறன் மற்றும் ஞாபக மறதி சார்ந்த நோய்களான அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா (Dementia) வருவதற்கான வாய்ப்புகள் கூடுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக் கொண்டாலே உப்பினால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகளை எளிதில் மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.