பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை பாமகவில் விருப்ப மனு வழங்கும் பணியை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர், ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, “பாமகவில் இரு அணிகள் கிடையாது. என் தலைமையிலான அணிதான் பாமக. வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
“திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு, “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என்றார். தேர்தல் நெருங்குவதால் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
