சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவைக் கூட்டவும் அதற்கு தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் அன்புமணி தரப்பில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘கட்சியின் சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரவில்லை. கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது, அதற்கு அனுமதி தர வேண்டாம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
