பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் “கழுதை தேய்ந்து கட்டெறும்பான” கதையாக மோசமாகி தரை தட்டும் நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்நாடு சர்வதேச நாணய நிதியம், ஆசிய வங்கி என Chance கிடைக்கும் இடங்களிலெல்லாம் கடன் வாங்கினாலும் ஓட்டை பாத்திரத்தில் போட்டது போல இருப்பதால் பொருளாதார சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து வெளியாகியுள்ள data உலகளவில் அதிர்வலைகளை கிளப்பிவிட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி பாகிஸ்தானின் மொத்த கடன் 76,007 பில்லியன். அதாவது 76 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் இந்தளவுக்கு உச்சத்தை தொட்டதில்லை. இந்திய ரூபாயில் மதிப்பில் கணக்கிட்டால் இது ரூ.23.1 டிரில்லியன்.
பாகிஸ்தானின் கடன் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2020-21இல் அந்நாட்டின் கடன் ரூ. 39,860 பில்லியனாக இருந்தது. அதே நேரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதன் கடன் ரூ. 17,380 பில்லியன். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் அதன் கடன் ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதையே இது வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூட இதை ஒப்புக் கொள்ளும் வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இன்று நாம் எந்த நட்பு நாட்டிற்குச் சென்றாலும் அல்லது அந்த நாட்டின் தலைவருக்கு ஃபோன் செய்தாலும் நாம் அவர்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டோம் என்று நினைக்கிறார்கள். சிறிய நாடுகள் கூட பாகிஸ்தானை விஞ்சிவிட்டன. கடந்த 75 ஆண்டுகளாக நாம் பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று விரக்தியில் கூறியிருப்பது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.