போக்குவரத்து நெரிசல் என்பது நகரங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் அடிக்கடி ஏற்படும் சிக்கலாகும். ஆனால், உலக வரலாற்றிலேயே மிக நீண்ட Traffic Jam 2010-ம் ஆண்டு சீனாவில் பதிவாகியுள்ளது.
அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பீஜிங்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 110 மற்றும் ஜிங்-ஜாங் அதிவேக பாதையில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வாகனங்கள் நின்று அசையாமல் சிக்கிக்கொண்டன. இந்த நெரிசல் சாதாரணமாக சில மணி நேரம் நீடிக்கவில்லை; மாறாக, 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தது.
சீனாவில் அந்நேரத்தில் நடந்த பெரும் சாலை பணிகள், அதிகரித்த கனரக லாரிகள், எரிபொருள் கொண்டு செல்லுதல், சுரங்கங்களில் இருந்து நிலக்கரி போக்குவரத்து ஆகியவை இந்த பெரும் நெரிசலுக்குக் காரணமாக அமைந்தன. லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் சிக்கி, பயணிகள் பல நாட்கள் சாலையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கிய ஓட்டுநர்கள் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியங்களை அங்கிருந்த உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து அதிக விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 மடங்கிற்கு மேல் விலை உயர்ந்ததால், பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
சீன அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை எடுத்து, சாலையில் சிக்கிய வாகனங்களை மெதுவாக வெளியேற்றினர். இதன் மூலம் சில வாரங்களில் போக்குவரத்து சீரானது. இவ்வாறு, சீனாவில் நிகழ்ந்த இந்த 100 கிலோமீட்டர் நீளமான Traffic Jam உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் நீண்டகால நெரிசலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.