ஜூன் 1, 2025 முதல், கனரா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, எந்தவிதமான சேமிப்பு வங்கி கணக்காக இருந்தாலும், அதில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
இதுவரை, நகரப் பகுதிகளில் ரூ.2,000, சிறிய நகரங்களில் ரூ.1,000, கிராமப்புறங்களில் ரூ.500 என மாதம் முழுவதும் ஒரு சராசரி இருப்பு பராமரிக்க வேண்டிய நிபந்தனை இருந்தது. அந்த இருப்பு இல்லாமல் இருந்தால் அபராதமும் கட்டணமும் விதிக்கப்படும்.
ஆனால் ஜூன் 1, 2025 முதல் இதெல்லாம் கிடையாது. கனரா வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “சுதந்திரத்தை உணருங்கள், வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அறிவித்து, இனி எந்தவொரு அபராதமும் இருக்காது என உறுதி அளித்துள்ளது.
சாதாரண சேமிப்புக் கணக்குகள் மட்டும் அல்ல… சம்பள கணக்குகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRI கணக்குகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் – எல்லோருக்கும் இந்த புதிய மாற்றம் பொருந்தும்.
இதன் மூலம், மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகமான பணத்தை வைத்திருக்க வேண்டிய அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். வங்கி சேவையைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் இது ஒரு பெரிய நன்மையாக அமையும்.
சிறிய அளவில் சேமிப்பது தவறு இல்லை, வங்கி கணக்கில் பெரிய தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படவே கூடாது – என்பதைக் கொண்டு வந்த, முதல் முன்னணி பொதுத்துறை வங்கியாக கனரா வங்கி தற்போது உருவெடுத்திருக்கிறது.
இது, இந்தியாவில் நிதிச் சேவைகளை மேலும் நெருக்கமாகவும், அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாகவும் மாற்றும் ஒரு மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், வாடிக்கையாளர்கள் கணக்கை திறக்க ஊக்குவிப்பதோடு, அவர்களின் தினசரி நிதிச் செயல்பாடுகளுக்கு நிம்மதியும் தருகிறது.