இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாக நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி, “போர் தொடங்குகிறது” என்ற வார்த்தையுடன் நேரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும் என கூறிய பிறகு வெளிவந்தது என்பதே முக்கியம்.
ஈரான் அரசு, “இன்று மிகப்பெரிய திருப்பம் நடக்கும்… அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருக்கிறது” என பகிரங்கமாக அறிவித்துள்ளது. உலக நாடுகளே அதற்கான தயாரிப்பில் இல்லை என்ற எச்சரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
காமெனியின் எக்ஸ் (X) பதிவு இன்னும் பரபரப்பை கிளப்பியது. அவர் “அலி கைபாருக்குத் திரும்புகிறார்” என எழுதியதுடன், ஒரு நபர் வாளுடன் கோட்டையில் நுழைவதையும், வானில் தீப்பிழம்புகள் பறப்பதையும் காணும் ஒரு படம் இணைக்கப்பட்டது. இது 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் கைபார் எனும் யூத நகரைக் கைப்பற்றிய வரலாற்றைக் குறிக்கும்… இந்த அழைப்பு உண்மையில் ஒரு சின்னம்!
பின்னர் அவர் மற்றொரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். “சியோனிஸ்ட் ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த கருணையும் காட்டமாட்டோம்” என்றது அந்தக் கருத்து.
மோதல் தொடரும் நிலையில், புதன்கிழமை அதிகாலையில் இரண்டு முறை ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டெல் அவிவில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டன.
இந்நேரத்தில், டிரம்ப் ஜி7 மாநாட்டை விட்டு நேரில் திரும்பி, 90 நிமிடங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், நெதன்யாகுவுடன் நேரடியாக பேசியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டிரம்ப், “ஈரான் வான்வெளியை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்… ஈரான் தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார் என்பதும் எங்களுக்கு தெரியும்” என ட்ரூத் சோஷியல் தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.