இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட் புக்கிங் என்பது, இன்று ஒரு பரிட்சை போலவே உள்ளது. டிக்கெட் கிடைத்தால், ஏதோ ஒரு குலுக்கல் பரிசு விழுந்தது போல மகிழ்ச்சி அடைகிறார்கள் பயணிகள். அந்த அளவுக்கு கடினமாகிவிட்டது இன்று ஒரு தட்கல் டிக்கெட் கிடைப்பது.
பயணங்களை கடைசி நேரத்தில் திட்டமிடும் பெரும்பாலானோர், தட்கல் டிக்கெட்டையே நம்பி பயணம் செய்வது வழக்கம். ஆனால் சமீப காலங்களில், டிக்கெட் புக்கிங் நேரத்தில் இருக்கிறது என்று காட்டினாலும், பேமெண்ட் வரைக்கும் போகும் போது டிக்கெட் காலியாகிவிடுகிறது. அதே நேரத்தில், சர்வர் ஸ்லோ, OTP வராத பிரச்சனை, குளறுபடிகள் என பயணிகள் எதிர்கொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலையை மாற்ற ரயில்வே தற்போது ஒரு புதிய மற்றும் வலுவான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இனிமேல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போதெல்லாம், ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் கட்டாயமாக இருக்கப் போகிறது. அதாவது, உங்கள் IRCTC கணக்கு ஆதாருடன் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்யும் போதும், ஆதார் மூலம் வரும் ஓடிபி வழியாகவே அடுத்தபடி செல்ல முடியும்.
இதன் மூலம், இடைத்தரர்களின் மோசடி குறையக்கூடிய வாய்ப்பு அதிகம். உண்மையில் பயணிக்க விரும்பும் நபருக்கே டிக்கெட் கிடைக்கும் நிலை உருவாகும். இந்த புதிய வசதி, நிச்சயமாக பயணிகள் நம்பிக்கையை பெறக்கூடியது. ரயில்வே அமைச்சர் கூறியதுபோல், இந்த மாற்றம் நடப்பு மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, கவுன்டரிலும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் ஒரு தட்கல் டிக்கெட் வாங்க வேண்டுமானால், உங்கள் ஆதார் விபரங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த புதிய நடைமுறைகள் மூலம், பயணிகள் விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்திற்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும். இது ஒரு நல்ல முயற்சி தான் என பெரும்பாலான பயணிகளும் தெரிவித்துள்ளனர்.