இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள், அதிலும் குறிப்பாக யுபிஐ பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் இப்போது நாள்தோறும் பில்கள் கட்டுவது முதல் ரோட்டுக் கடையில் டீ வாங்குவதற்கும் யுபிஐயையே பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், எந்தவொரு கமிஷனும் இல்லாமல் எளிமையாக பண பரிவர்த்தனை செய்யலாம் என்பதே.
ஆனால் சமீபமாக யுபிஐ சேவையில் திடீர் முடக்கம், அல்லது பரிவர்த்தனைகள் தாமதம் போன்ற சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. இப்படி இன்றைய டிஜிட்டல் இந்தியா முழுமையாக யுபிஐயை நம்பும் சூழலில், இத்தகைய சேவை முடக்கம் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது.
இதையடுத்து, யுபிஐயை கட்டுப்படுத்தும் நிறுவனமான NPCI – National Payments Corporation of India – சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முக்கியமான விஷயமா சொன்னா, ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் வங்கி பேலன்ஸ் செக் செய்யும் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு. இப்போது எத்தனை முறை வேண்டுமானாலும் பேலன்ஸ் செக் செய்யலாம். ஆனால் ஆகஸ்ட் முதல் ஒரே செயலியில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே செக் செய்யலாம். ஒரே நபர் இரண்டு செயலிகளை பயன்படுத்தினால், தலா 50 – மொத்தம் 100 முறை வரை செக் செய்ய முடியும்.
அதே மாதிரி, ஒருவர் தங்களுடைய மொபைல் நம்பருடன் எந்த வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 25 முறை மட்டுமே செக் செய்ய முடியும். இதுவரை இதற்கேதும் வரம்பில்லை.
மேலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பாப்புலர் யுபிஐ செயலிகள் தங்கள் செயலிகளை துல்லியமாக இயங்குமாறு கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலில் பிழைகள் இருந்தால் அபராதம், கட்டுப்பாடு, அல்லது புதிய பயனர்கள் சேர்க்க தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
எல்லா பேமெண்ட் சேவைகளும் ஆகஸ்ட் 31க்குள் தங்கள் செயலிகளை ஆய்வு செய்து முழுமையான தகவலை NPCI-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இது எல்லாம் யுபிஐ சேவை சீராகவும், இடையறையில்லாமலும் இயங்குவதற்காகவே NPCI எடுத்து வைத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். நாளைக்கு யுபிஐ சேவைகள் தடைபடாமல் செயல்பட வேண்டுமென்றால், இந்த கட்டுப்பாடுகள் நிச்சயமாக அவசியமானவை என கூறப்படுகிறது.