சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும் வீடு முழுவதும் கொட்டிய செயல் அநாகரிகத்தின் உச்சமானது. பொது தளங்களில் ஒருவரது பேச்சு, அடுத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தால் அதன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டரீதியான வாய்ப்புகளை நிராகரித்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.