தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், ரூ.1000 பெறஅனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அதற்கும் முக்கியமான நிபந்தனைகள் இருக்கின்றன. அதைப் பூர்த்தி செய்யாவிட்டால், பணம் வருவதில்லை என்பதை அரசு தெளிவாக கூறியுள்ளது.
முதலாவது, உங்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்கு, மற்றும் மொபைல் எண் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, ஆதார் கார்டு வங்கி கணக்குடன் இணைந்திருக்க வேண்டும். அதே போல் வங்கி கணக்கு, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைந்திருக்க வேண்டும். முக்கியமாக, ஆதாரில் உள்ள மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் எண் ஒரே எண்ணாக இருக்க வேண்டும்.
இந்த இணைப்புகள் இல்லையென்றால், அரசு ரூ.1000-ஐ உங்கள் கணக்கில் அனுப்ப முடியாது. ஏனென்றால் இது நேரடி நன்மை பரிமாற்றம் திட்டத்தின் கீழ் வருகிறது.
பணம் அனுப்பப்படும் நேரத்தில் SMS அறிவிப்பு வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் இணைக்கப்படாத நிலையில், இந்த தகவலையும் நீங்கள் இழக்க வாய்ப்பு உள்ளது. விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுத்த மொபைல் எண், வங்கி மற்றும் ஆதாரில் இருக்கும் எண்ணுடன் சேர்ந்து இருந்தால், ₹1 சோதனை தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், அதற்கான தகவலும் SMS-ல் வரும்.
இதற்கான தகுதி நிபந்தனைகள்
நீங்கள் குடும்பத்தலைவியாக இருக்க வேண்டும். அதாவது, ரேஷன் கார்டில் “தலைவன்” என்ற பட்டியலில் இருக்கும் ஆணின் மனைவியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கணவர் இல்லாத குடும்பத்தில், மூத்த பெண்ணாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஆண்டுவருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களும், அரசு பென்ஷன் பெறுபவர்களும், வருமான வரி செலுத்துபவர்களும் இதற்கு தகுதியற்றவர்கள்.
ஒரு ரேஷன் கார்டில் ஒரு பெண்மணிக்கே இந்த தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகள் இருந்தாலும், ஒருவருக்கே இத்தொகை வழங்கப்படும். இரண்டாவது நபரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
முக்கியமாக ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். தகுதியும், சரியான விவரங்களும் இருந்தால், அவர்கள் கூட தொகையை பெற முடியும்.
தற்போது, 1 கோடியே 14 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். மேலும், 2 கோடி பெண்கள் இன்னும் பெறாத நிலையில், மே 29 முதல் புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது குறித்து அரசு தெரிவித்துள்ள படி – இன்னும் 2 மாதத்துக்குள் தகுதியானவர்களுக்கு ₹1000 நிதி வழங்கப்படும். எனவே, தயவுசெய்து உங்கள் ஆதார், வங்கி கணக்கு, மற்றும் மொபைல் எண்ணை சரியாக இணைத்து வைத்திருங்கள்.