கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடப்பதை ஒட்டி, கடந்த 23-ம் தேதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தை அமைச்சர்கள் நடத்தினர். ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார்.
இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார்கள் எழுந்தன. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்.வசந்த் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, அதிகாரிகளை மிரட்டுவது, டெண்டர் விடுவதில் முறைகேடு செய்வது என பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.