தமிழ் திரையுலகின் நடிகரான அபிநய், கடந்த சில வருடங்களாகவே லிவர் சிரோசிஸ் என்ற கல்லீரல் அழற்சி நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நவம்பர் 10ம் தேதி சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.
மனித உடலில் முக்கிய பங்காற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் பல்வேறு தீவிர பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றில் மிக ஆபத்தானது லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) எனப்படும் நோய் ஆகும். இது கல்லீரல் திசுக்கள் கடினமடைந்து, இயல்பான செயல்பாடுகள் குறைவதனால் ஏற்படுகிறது.
லிவர் சிரோசிஸ் மதுப்பழக்கம் மட்டுமின்றி பல காரணங்களால் உருவாகலாம். ஆனாலும் மதுப்பழக்கம் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. நீண்டகாலம் Hepatitis B அல்லது Hepatitis C போன்ற வைரஸ் தொற்றுகள், அதிக கொழுப்பு சேர்க்கை, சில மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு, மற்றும் சிலவகை உடல்நிலை குறைபாடுகள் போன்றவையும் இந்த நோயை ஏற்படுத்தக் கூடியவை.
லிவர் சிரோசிஸ் முழுமையாக குணமாக முடியாது என்றாலும், ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை தடுக்க முடியும். மதுவை முழுமையாக தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது, உடல் எடை கட்டுப்பாடு, மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகள் எடுத்துக்கொள்வது நோயின் வேகத்தை குறைக்கும்.
கடைசி கட்டத்தில் கல்லீரல் முழுமையாக செயலிழந்தால், ஒரே தீர்வாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அதாவது Liver Transplant தேவைப்படும். மருத்துவர்கள் தெரிவிப்பதாவது, ‘லிவர் சிரோசிஸ் தடுப்பதே சிறந்த சிகிச்சை. மது அருந்துவதை தவிர்த்து, சீரான பரிசோதனை செய்வது உயிரைக் காக்கும் முக்கிய வழி’ என கூறுகின்றனர்.
