அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளின் தொலைதூர எல்லைப் பகுதிகளில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில், மிகப்பெரிய கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘விகுனா கனிம வளம்’ என அழைக்கப்படும் இந்தப் புதிய சுரங்கம், உலகளவில் காப்பர் அதாவது தாமிரம், தங்கம் மற்றும் வெள்ளி உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, ‘விகுனா’ பகுதியில் சுமார் 13 மில்லியன் டன் தாமிரம், 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம், மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, உலகளாவிய கனிம விநியோகத்தின் சமநிலையை மாற்றக்கூடிய முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
விகுனா திட்டம் ஒரு தனிப்பட்ட சுரங்கமல்ல. இது 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபிலோ டெல் சோல் மற்றும் ஜோஸ்மேரியா எனும் இரு சுரங்கங்களை ஒருங்கிணைக்கிறது. உலகளாவிய தரவரிசையில், S&P குளோபல் நிறுவனம் இந்தத் திட்டத்தை முதல் 10 முக்கியமான காப்பர் வளங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.
சுத்தமான எரிசக்தி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், காப்பருக்கான தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் கணிப்பின்படி, 2040ஆம் ஆண்டுக்குள் காப்பரின் தேவை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை மின்னணுவியல் சாதனங்கள், சோலார் பேனல்கள், செயற்கைக்கோள் கூறுகள் போன்ற துறைகளில் அத்தியாவசியமானவை. இதனால், விகுனா திட்டம் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அர்ஜென்டினாவின் சான் ஜுவான் மாகாணம் இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி வருவாயில் பெரும் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது.
