Tuesday, January 27, 2026

வடமாநில புலம்பெயர் தொழிலாளியை அடித்தே கொன்ற கேரளா கும்பல்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, திருடன் என சந்தேகித்து கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என கேள்வி எழுப்பி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, வாழையார் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கிராம மக்களுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சிலர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் ராம்நாராயணன் பாஹேல் என்பதும், அவருக்கு வயது 31 என்பதும் தெரியவந்தது. அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் எனபதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News