தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தபோது அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு இருந்தார். தகவல் அறிந்து அவர் உடனடியாக இலங்கையில் இருந்து கரூர் திரும்பினார்.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார். உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் கூறினார். மேலும், த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
குறிப்பாக, கரூர் வருகை தந்த பா.ஜ.க. விசாரணை குழுவுடனும் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது அண்ணாமலை திடீரென டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.