மூன்றாவது உலகப்போர் மூண்டு விடுமோ? என்று, உலக நாடுகள் அஞ்சும் அளவுக்கு ஈரான் – இஸ்ரேல் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது மோசமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருவேளை ஈரான் அணுகுண்டினை தயாரித்து விட்டால், தங்களுக்கு அது பேராபத்தாக முடியும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. ஈரான், இஸ்ரேலை பரம எதிரியாகக் கருதுவதே இதற்கு காரணமாகும்.
இந்தநிலையில் ஒரு அணுகுண்டினை தயாரிக்க, ஈரானுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அணுகுண்டு தயாரிக்க தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட யுரேனிமும், அதற்கு தேவையான தொழில்நுட்பமும் ஈரானிடம் உள்ளது.
இதைவைத்து ஈரானால் ஒரு அணுகுண்டினை 3 முதல் 7 நாட்களுக்குள் தயாரித்து விட முடியும். இந்தரீதியில் சென்றால் 6 மாத காலத்தில் சுமார் 24 அணுகுண்டுகளை அந்நாட்டால் உருவாக்கிட முடியும். இதை தெரிந்துகொண்டு தான் இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் ஈரானோ தாங்கள் அமைதிக்காக மட்டுமே, யுரேனியத்தை மேம்படுத்துவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. என்றாலும் இஸ்ரேல், ஈரானின் அமைதி பேச்சை நம்ப தயாராக இல்லை. இதனால் இஸ்ரேல் – ஈரான் மோதல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.