உலகில் அழகான தீவுகளை காண மக்கள் லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு சுற்றுலா செல்லும் சூழலில், ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவு, அங்கு குடியேறி வேலை செய்யும் நபர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு அழகான தீவுகளில் தற்போது வெறும் 40 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். சுற்றுலா காலத்தை முன்னிட்டு அதிகமான பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெஸ்டர்ன் ஐல்ஸ் நிர்வாகம், கிராமப்புற மருத்துவத்தில் அனுபவமுள்ள மருத்தவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 கோடி ஊதியம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் ரூ.1 கோடி அடிப்படை ஊதியமாகவும், ரூ.8 லட்சம் இடமாற்றச் செலவுக்காகவும், ரூ.1.3 லட்சம் பணிக்கொடையாகவும், மேலும் ரூ.11 லட்சம் அலவன்ஸாகவும் வழங்கப்படும். இதற்காக வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்றினால் போதுமானது.
இந்த தீவில் பணிபுரிய விண்ணப்பிக்கும் நபர்கள் கடலோரப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் மற்றும் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டவர்களுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவில் இயங்கும் பள்ளியில் 5 முதல் 11 வயதுக்குள் உள்ள 5 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதில் 2 பேர் நர்சரி மாணவர்கள். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.62 லட்சம் ஊதியமும், ரூ.6 லட்சம் வரை கூடுதல் உதவித் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
