நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ., 1ம் தேதி துவக்கம்! தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்!

திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் தொடர்பான சிறப்பு பயிற்சி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது தாராபுரம் சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 04258-220640 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சி மொத்தம் 17 நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயிற்சிக்கான கட்டணமாக ரூ.4,550 வசூலிக்கப்படுகிறது. நகையின் தரத்தை மதிப்பிடும் உபகரணங்கள் பயிற்சியின் போது வழங்கப்படும். இதில் 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேர செயல்முறை பயிற்சியும் கொடுக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த சான்றிதழ் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் தகுதி கிடைக்கும். மேலும், பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உண்டு.

இப்பயிற்சிக்கான வயது வரம்பு ஏதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நகைத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News