கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் ‘நிபா’ வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை எந்தவித ‘நிபா’ வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா? என மக்கள் கவனிக்க வேண்டும். கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, ‘நிபா’ வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.