தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இணைய வேண்டும் என்பது டிடிவியின் ஆசை. ஒன்று சேர நான் ரெடி. அதிமுகவில் சேர்க்க டிடிவி தினகரனும் அவரது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா என்பதை கேட்டுச்சொல்லுங்கள். டிடிவி தினகரனை மட்டுமல்லாது தன்னையும் இணைத்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ஓ. பன்னீர்செல்வம் நான்கு வருடங்களாக இதனை கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
