சென்னை கொரட்டூர் பகுதியில் சரவணா குழுமத்தின் உரிமையாளரும் நடிகருமான லெஜெண்ட் சரவணாவின் ரசிகர் நற்பணி மன்ற தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட லெஜன்ட் சரவணாவின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. மேலும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெஜன்ட் சரவணா ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் முத்து துரை, “லெஜெண்ட் சரவணா ரசிகர்களுக்கு நற்பணி மன்ற கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் லெஜெண்ட் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் போதும் ஆடியோ வெளியீடு நடத்தும் போதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நிர்வாகிகள் இடம் ஆலோசனையை நடத்தியுள்ளோம்.
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ மாணவிகளுக்கு நற்பணி மன்றம் சார்பில் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். இது தவிர மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். அரசியலுக்கு வருவது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் தலைவர் லெஜென் சரவணா தான் அது குறித்து முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.