இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணம்… ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது.
பழைய தலைவர்கள் ஓய்வு பெற்றதால், இந்த அணிக்கு இளம் வீரர்கள்தான் தலையாய அஸ்திவாரம். கேப்டனாக ஷுப்மன் கில், துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்… அசத்தும் பொறுப்புகள் இளம் தோள்களில்….
ஆனால், அணியின் மிக முக்கியமான வீரர் ஜஸ்பிரித் பும்ரா பற்றிய தகவல்தான் இப்போது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாடுவாரா? இல்லையா? என்பதை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதி செய்யவில்லை.
மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில் இருவரும், “பும்ரா மூன்று போட்டிகளுக்கு விளையாடுவார். ஆனால் எந்தப் போட்டிகள் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை” எனக் கூறினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், ஐந்தாவது டெஸ்ட் நடுவே முதுகு காயம் ஏற்பட்டு வெளியேறியது இன்னும் ரசிகர்களை மறக்க வைக்கவில்லை.
அந்தக் காயத்தின் தாக்கமே இப்போது பும்ராவின் பங்களிப்பை கட்டுப்படுத்திவருகிறது. மருத்துவ ஆலோசனைப்படி, தொடர்ச்சியான போட்டிகளில் பும்ரா பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால்தான், பும்ரா IPL-ல் கூட முதல் நான்கு ஆட்டங்களை தவிர்த்து பின்னர் தான் வந்தார்.
ஆனால், பும்ரா இல்லாமலே ஆட்டம் ஆட வேண்டிய சூழ்நிலைக்காக, இந்திய அணி தயார் நிலையில் இருக்கிறது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள்… பளிச்சென்று களமிறங்க காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில், “பும்ரா ஐந்து போட்டிகளும் தவிர்த்துவிட்டால் அதிர்ச்சி இல்லை” என்ற கம்பீரின் கூற்றும்… ரசிகர்களை சற்று கவலையுடன் யோசிக்க வைத்திருக்கிறது.
இந்த தொடரின் முடிவுகள் என்னவாகும்? பும்ரா பங்கேற்காத போட்டிகளில் இந்தியா எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் பொறுத்துதான், இந்த இளம் அணியின் உண்மையான பவர் என்ன என்பது நமக்குத் தெரிய வரும்.