Thursday, June 26, 2025

இந்தியா தயாரிக்கும் புதிய வான்வழி ‘குரூஸ்’ ஏவுகணை! பிரம்மோஸ் அளவுக்கு வருமா ?

இந்தியா பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கிறது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சவால் வைக்கும் வகையில், இந்திய விமானப்படையின் வலிமை விரைவாக அதிகரிக்கிறது. இதற்குப் பின்னணி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO. அவர்கள் தற்போது ஒரு புதிய வான்வழி சப்சோனிக் குருஷ் ஏவுகணையை உருவாக்கி வருகின்றனர்.

இந்த ஏவுகணை, பூமியிலிருந்து ஏவப்படுவதில்லை. அதற்கு பதிலாக, Su-30MKI, ரஃபேல், தேஜாஸ், மிக்-29 போன்ற இந்திய விமானப்படை போர் விமானங்களிலிருந்தே நேரடியாக பறக்கிறது. இதனால், பூஸ்டர் தேவையே இல்லை. ஏற்கனவே விண்ணில் பறந்து கொண்டு இருக்கும் விமானத்தில் இருந்தே ஏவப்படும் இந்த ஏவுகணை, உயரமும் வேகமும் பெற்றுவிட்டதால் நேரடியாக இலக்கை நோக்கிப் பாயும்.

600 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எதிரியின் கட்டளை மையங்கள், விமான தளங்கள் போன்ற முக்கிய இடங்களை, மிகத் துல்லியமாகத் தாக்க இந்த ஏவுகணைக்கு சிறப்பு வழிகாட்டல் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் வழிகாட்டுதலும் இதில் உள்ளது.

இந்த ஏவுகணைக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாணிக் டர்போஃபேன் இயந்திரம் (Manik Turbofan Engine) பயன்படுத்தப்படும். இது நம்மாலேயே உருவாக்கப்பட்ட எஞ்சின் என்பதால், இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனை.

பிரம்மோஸ்-என்ஜி ஏவுகணையுடன் ஒப்பிட்டால், இது மெதுவாக பறக்கும் ஆனால் நீண்ட தூரத்திற்கு செல்லக்கூடியது. மேலும், குறைந்த விலை கொண்டதாலே, இந்திய விமானப்படை இதை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த முடியும்.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த ஏவுகணையின் முதல் சோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இயக்கத்தில் வந்துவிட்டால், இந்தியாவின் வான்வழி தாக்குதலுக்கு ஒரு புதிய வலிமையான ஆயுதம் கிடைக்கும்.

இது போன்ற புதுமைகள்தான் இந்தியாவின் பாதுகாப்பை உலக அளவில் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news