மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவில், தேர்தலில் நேரில் சென்று வாக்களிக்கும் முறை தான் நடைமுறையில் உள்ளது. இதனால் தேர்தலின்போது வயதானவர்கள், மாற்று திறனாளிகள் தங்களின் வாக்கினை பதிவு செய்வது, வெகுவாக கவனம் பெறுகிறது.
இந்தநிலையில் அவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு முறையை பீஹார் மாநிலம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவினை அறிமுகம் செய்த இந்தியாவின் முதல் மாநிலம், என்ற பெருமை அம்மாநிலத்துக்கு கிடைத்திருக்கிறது.
வருகின்ற ஜூன் 28ம் தேதி அங்கு ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் இருந்து அங்கு மின்னணு வாக்குப்பதிவு அமலுக்கு வருகிறது. இதில் வாக்காளர்கள் மொபைல் செயலியில் இருந்து தங்களின் வாக்கினை பதிவு செய்ய முடியும்.
இதன்மூலம் தொலைதூரத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் மற்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நபர்கள் தங்களின் வாக்கினை செலுத்த முடியும். இதற்காக அரசின் C – DAC எனப்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம், e-Voting SECBHR என்னும் செயலியை உருவாக்கி உள்ளது.
இதேபோல பீஹார் மாநில தேர்தல் ஆணையமும், இந்த மின்னணு வாக்குப்பதிவுக்கான செயலியை உருவாக்கி இருக்கிறது. எனவே வாக்காளர்கள் இந்த 2 மொபைல் செயலிகள் வழியாகவும் தங்களின் வாக்கினை செலுத்த முடியும்.
இதில் முறைகேடுகள் நேராமல் தடுப்பதற்காக வாக்காளர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்தல், பயோமெட்ரிக் சரிபார்ப்புக்காக முகத்தை ஸ்கேன் செய்வது, முன்பு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தரவுகளுடன் முகத்தை ஒப்பீடு செய்து பார்ப்பது போன்ற, எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
இது மட்டுமின்றி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இந்த அமைப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும், VVPAT அதாவது Voter Verifiable Paper Audit Trail முறையைப் போன்ற ஒரு தணிக்கை பாதையும் உள்ளது. இந்த அம்சங்கள் ஒவ்வொரு வாக்கும் உண்மையானது, சரிபார்க்கக்கூடியது மற்றும் பாதுகாப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்கின்றன .
இந்த மின்னணு வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத், ” இதுவரை 10 ஆயிரம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவுக்கு பதிவு செய்துள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்கள், இந்த முறையை பயன்படுத்தி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் தேர்தலில் வாக்களிப்பவர்களின் சதவீதம் அதிகரிக்கும், ” இவ்வாறு தெரிவித்து இருக்கிறார். மொபைல் அடிப்படையிலான மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்துவதன் மூலம், நாடு தழுவிய மின்னணு வாக்குப்பதிவு முறைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய, ஒரே ஐரோப்பிய நாடான எஸ்டோனியா போன்ற நாடுகளின் வரிசையில் பீஹார் மாநிலமும் இணைவது குறிப்பிடத்தக்கது