இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்னமும் பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தியே வைத்துள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் 22 கோடி மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் 25% உள்நாட்டு உற்பத்தி முடங்கும் என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட எதிர்வினையின் பலத்த அடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானின் ஆணிவேரை அசைப்பதாக இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் என்பது முக்கியமான வாழ்வாதாரம். அந்த நாட்டின் மக்கள்தொகையின் 25 கோடியே 50 லட்சம் பேரில் 22 கோடி மக்கள் சிந்து நதி நீரால் தான் பயனடைந்து வந்தனர். இதனால் சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டது பாகிஸ்தானை மூச்சு திணறவைத்துவிட்டது.
“தண்ணீரை விடுங்ககள்” என்ற பாகிஸ்தானின் மிரட்டலுக்கு இந்தியா பணியாததால் வேறு வழியின்றி அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கினார். இதற்கும் நம் நாடு தற்போது வரை செவி சாய்க்கவில்லை. நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில், ‛‛சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும். அதனை கைவிடும்வரை சிந்து நதிநீர் இடைநிறுத்தம் அமலில் இருக்கும்” என்று நெற்றிப்பொட்டில் அடித்ததை போல் தெரிவித்தார்.
இதற்கிடையே தற்போது புதிய தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பது மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் பொருளாதாரத்திலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அது. பாகிஸ்தானில் லாகூர், முல்தான், கராச்சி உள்ளிட்ட நகரங்களும் சிந்து நதிநீரை நம்பியிருப்பதால் அந்த நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. மேலும் தர்பேலா, மங்களா நிலையங்களின் மின் உற்பத்தி நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.