இந்தியா – ஒரு காலத்தில் வளர்ந்து வரும் நாடு என்று மட்டுமே அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது உலகமே பார்த்துக் கொண்டு பேசும் வளர்ந்த நாடாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் வெளியாகியுள்ள சர்வதேச பொருளாதார தரவரிசைப் பட்டியலில், இந்தியா ஜப்பானை முந்தி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4 டிரில்லியன் டாலர் என்ற மாபெரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பிறகு, உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த விவரத்தை நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதுபோல், “1991ல் துவங்கிய தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து, இன்று வரை இந்தியா தொடர்ந்து சீர்திருத்தங்களை செய்துள்ளது. இன்று உலக சூழ்நிலையும் இந்தியாவுக்கே ஆதரவாக அமைந்துள்ளது.”
இப்போது, உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் சீனாவுக்குப் பதிலாக இந்தியாவை மாற்று உற்பத்தி மையமாக பார்க்கத் தொடங்கியுள்ளன. இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய வாய்ப்பு!
அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும்” எனக் கூறுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு பதிலளித்த சுப்ரமணியம், “அந்த நிலைமை எப்படி வந்தாலும், இந்தியா இப்போது உலக உற்பத்தி தளமாக வலுப்பெற்று விட்டது. இந்தியாவின் பாதையை எதுவும் நிறுத்த முடியாது,” என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அரசு சொத்துகளை பணமாக்கும் நடவடிக்கைகளும் வேகமாக முன்னேற்றப்பட்டு வருவதால், வளர்ச்சி திசை தெளிவாக இருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி வீதியைப் பார்த்தால், இன்னும் 2.5 முதல் 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பது உறுதி.