ஆதார் அட்டையை பொறுத்தவரை முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் தற்போதைய குழப்பமே பெயர் மற்றும் முகவரியை மாற்றுவதில் தான். பெயர் என்று வரும்போது, இனிஷியலை முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா கூடாதா என்ற சிக்கல் இருக்கிறது. இந்நிலையில் ஆதாருடன் PAN எண்ணை இணைக்கும் போது, பெயர் மற்றும் இனிஷியலில் குழப்பம் வருகிறது.
சில ஆண்டுகளாகவே ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக மாறி இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, குழந்தையை பள்ளியில் சேர்ப்பது, புதிதாக வங்கி கணக்கு ஆரம்பிப்பது என்று அனைத்துமே ஆதார் கார்டு இருந்தால் தான் சாத்தியம்.
ஆனால், தமிழகத்தில் உள்ள ஆதார் மையங்களில் புதிய ஆதார் பதிவு செய்யப்படும்போது பெற்றோரின் ஆதார் அட்டையில் அச்சிடப்பட்டிருப்பது போல பிறப்பு சான்றிதழில் பெயர் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், தற்போது பெயர் முழுபெயராகவோ அல்லது இனிஷியலுடன் வரும் முழுபெயர், இனிஷியல் முன்னதாகவும் பின்னர் பெயரும், இனிஷியல் பின்னதாக இருந்தாலும் புதிய ஆதார் பதிவு செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இனிஷியலுடன் பெயர் இல்லாவிட்டாலும் புதிய ஆதாரை பதியலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது. ஒருவேளை இனிஷியல் சேர்க்கவேண்டுமென்றால் Online-ல் கூட Update செய்து கொள்ளலாம்.
முன்னதாக, வேலூர் மாவட்டத்தில் ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் உட்பட 7 மையங்கள், தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் ஆதார் மையங்கள் என அனைத்திலுமே இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக ஆதார் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.